| ADDED : ஜூலை 25, 2024 12:52 AM
வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் விபத்து ஏற்படாத வகையில் இடங்களை தேர்வு செய்து, அங்கு வைக்கப்பட உள்ள பேனர்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.சென்னையில் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் அமைக்கப்பட்ட விளம்பர பேனர்களால், ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து நகரின் எந்தப்பகுதியிலும் பேனர்கள் வைக்கக் கூடாது என, உச்ச நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தன.இந்நிலையில், வருவாய்க்காக, சில பகுதிகளில் விளம்பர பேனர்கள் வைக்க சென்னை மாநகராட்சி முன் வந்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்புகளில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்நிலையில், பாதசாரிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் விபத்து ஏற்படாத வகையில் விளம்பர பேனர்கள் வைப்பதற்கான இடங்கள் குறித்து, காவல் துறையினரிடம் மாநகராட்சி அதிகாரிகள் அறிக்கை கேட்டனர். இதன் அடிப்படையில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது எந்தெந்த இடத்தில் பேனர்கள் வைக்க அனுமதிக்கலாம் என்பது குறித்து ஒவ்வொரு உதவி கமிஷனரும், கூடுதல் கமிஷனரிடம் பரிந்துரை அறிக்கை அளித்தனர். ஒவ்வொரு உதவி கமிஷனர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட ஐந்து இடங்களை தேர்வு செய்து அறிக்கை அளித்துள்ளதாக தெரியவந்து உள்ளது. இதன் அடிப்படையில், விளம்பர பேனர்களுக்கு தடையில்லா சான்று வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. - நமது நிருபர் -