மாநகராட்சி ஊழியர்களுக்கு போட்டிகள் துவக்கம்
சென்னை, சென்னை மாநகராட்சியில் பணிபுரியும், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கான விளையாட்டு போட்டிகள் துவக்க விழா, சென்ட்ரல் கண்ணப்பர் திடலில் நேற்று நடந்தது. அமைச்சர் சேகர்பாபு பங்கேற்று, ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி, போட்டியை துவங்கினார்.போட்டியில் 586 பெண்கள் உட்பட 2,342 ஊழியர்கள், 74 கவுன்சிலர்கள் என, மொத்தம் 2,416 பேர் உற்சாகமாக பங்கேற்றுள்ளனர். போட்டிகள் தொடர்ந்து, இம்மாதம் 25ம் தேதி வரை பல்வேறு இடங்களில் நடக்கின்றன.நேரு விளையாட்டு அரங்கில், இன்று கேரம் மற்றும் நாளை செஸ்; 13ல் கீழ்ப்பாக்கம் நேரு பூங்காவில் கால்பந்து; 14ல் கண்ணப்பர் திடலில், டென்னிகாய்ட், எறிப்பந்து, கோ -கோ போட்டிகள் நடக்கின்றன.மந்தைவெளி அல்போன்சா திடலில், 15ம் தேதி, டேபிள் டென்னிஸ்; 17ல் கண்ணப்பர் திடலில் வாலிபால் மற்றும் கபடி; 18ல் வியாசர்பாடி முல்லை நகர் பேட்மின்டன்; 19, 20ல் நேரு பூங்காவில் தடகளப் போட்டிகள் நடக்கின்றன.