| ADDED : ஜூலை 24, 2024 12:29 AM
சென்னை, கே.கே.நகர், அசோக் நகர் சாலைகளில், பொது மக்களுக்கு இடையூறாக உள்ள அம்மா உணவகங்கள், மின்பெட்டிகள், கழிப்பறைகளை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.கே.கே.நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனு: சென்னை கே.கே.நகர், அசோக் நகர் பகுதிகளில் உள்ள நடைபாதைகளில், பொதுமக்களுக்கு இடையூறாக, பொதுக்கழிப்பறைகள், ஆபத்தை ஏற்படுத்தும் மின் பெட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன.இவற்றால் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவிகள் மற்றும் பொது மக்கள் செல்ல வழியில்லை. இதுகுறித்து, மாநகராட்சிக்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி கே.குமரேஷ்பாபு அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.நடைபாதையில் அமைக்கப்பட்ட மின் பெட்டிகள், கழிப்பறைகளை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.