| ADDED : ஜூலை 24, 2024 01:22 AM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் காமகோடி பீடம், சங்கரமடத்தின் 69வது பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகளின் 90வது ஜெயந்தி மஹோத்ஸவம், காஞ்சிபுரம் சங்கரமடத்தில் நேற்று விமரிசையாக நடந்தது.ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில், நேற்று, காலை 8:00 மணிக்கு சதுர்வேத பாராயணம், ஏகாதச ருத்ரம், ஹோமம், ஜபம் வேத பாக்ஷ்ய ஸதஸ் மற்றும் விசேஷ அபிஷேக ஆராதனையை தொடர்ந்து, மலர் அலங்காரம் நடந்தது. மாலை 4:35 மணிக்கு ஸ்ரீராமர் பட்டாபிஷேகமும், நாட்டுப்புற கலைநிகழ்ச்சியும் நடந்தது, இரவு 7:00 மணிக்கு நலிந்த கிராமப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இரவு 7:30 மணிக்கு, நான்கு ராஜ வீதிகளிலும் ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகளின் தங்க ரதம் உலா வந்தது. முன்னதாக, காஞ்சி காமகோடி வித்யா மண்டலி சார்பில் 108 பெண்கள் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்தனர். ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தின் அருகில் இருந்து, 108 பெண்கள் பால்குடங்களுடன் காமாட்சி அம்மன் கோவிலுக்கு மங்கல வாத்தியங்களுடன் ஊர்வலமாக சென்று அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, நவராத்திரி கொலு மண்டபத்தில் 108 சுமங்கலிகளுக்கு புடவை. மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது. மதியம், ஜெயேந்திரர் ப்ளாட்டினம் ஜூப்ளி டிரஸ்ட் மற்றும் காஞ்சி காமாட்சி சங்கர மடம் வரவேற்பு குழு சார்பில், சங்கரமடம் நுழைவாயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.