| ADDED : ஜூன் 21, 2024 12:13 AM
கூடுவாஞ்சேரி, மேடவாக்கம் விஜய நகரம், திருவீதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வள்ளிநாயகம், 37.இவரை, பெங்களூருவைச் சேர்ந்த நியாஸ் என்பவர், 'செங்கல்பட்டில் குறைந்த விலையில் இடம் இருப்பதாகவும், முன் பணத்துடன் வருமாறும்' கூறியுள்ளார்.இடம் வாங்கும் ஆசையில் இருந்த வள்ளிநாயகம், இடத்தை முன்பதிவு செய்வதற்காக, அவரது தம்பி கார்த்திக்குடன் 4.50 லட்சம் ரூபாயை எடுத்துச் சென்றுள்ளார்.அப்போது, தாம்பரம் பகுதியில் சொகுசு காரில் நின்ற நியாஸ், இடத்தை காட்டுவதாக கூறி, அவர்களை காரில் அழைத்துச் சென்றுள்ளார். காரை நியாஸின் டிரைவர் ஓட்டியுள்ளார். சீனிவாசபுரம் அருகே சென்றபோது, ஜி.எஸ்.டி., சாலையோரம் நிறுத்தி டீ அருந்தி செல்லலாம் என, நியாஸ் கூறியுள்ளார். அதன்படி, பணப்பையை காரில் வைத்து, மூவரும் இறங்கி டீ அருந்தினர். விரைவாக டீ குடித்து முடித்த நியாஸ், வேகமாக காரில் ஏறி கண்ணிமைக்கும் நேரத்தில் பறந்துவிட்டார்.அதிர்ச்சியடைந்த வள்ளிநாயகம், நியாஸின் மொபைல் போனுக்கு தொடர்புகொண்டபோது, அது 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. உடனடியாக, அவர் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார், 'சிசிடிவி' கேமரா காட்சிகள் வாயிலாக தேடி வருகின்றனர்.