ஸ்டார்ட் ஆகாத புது பைக் ரூ.20,000 இழப்பீடு தர உத்தரவு
சென்னை:கீழ்கட்டளையைச் சேர்ந்த சுரேஷ்பாபு என்பவர் சென்னை தெற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:கீழ்கட்டளையில் 'மகாலட்சுமி மோட்டார்ஸ்' என்ற நிறுவனத்தில் 61,968 ரூபாயில் டி.வி.எஸ். ஸ்போர்ட் ஈ.எஸ்., பிளாக் சில்வர் என்ற மாடல் பைக் வாங்கினேன்.இரண்டு நாளுக்கு பின், 'ஸ்டார்ட்' ஆகவில்லை. நிறுவனத்தினர் பழுதை சரிசெய்ய புது புது காரணங்களை தெரிவித்தனர். எனவே, மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு 3 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனுவை, சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தலைவர் பி.ஜிஜா, உறுப்பினர்கள் டி.ஆர்.சிவகுமார், எஸ். நந்தகோபாலன் அடங்கிய அமர்வு விசாரித்தது. பின் அமர்வு பிறப்பித்த உத்தரவு:வாகனத்தை வாங்கியது முதல் பல பிரச்னைகளை புகார்தாரர் எதிர்கொண்டுள்ளார். எனவே, சேவை குறைபாடுடன் செயல்பட்டதால் வாகனத்துக்கான தொகை 61,968 ரூபாயை, 9 சதவீத வட்டியுடனும், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு 20,000, வழக்கு செலவாக 5,000 ரூபாயும், மனுதாரருக்கு டி.வி.எஸ்.மோட்டார் நிறுவனம், மகாலட்சுமி மோட்டார்ஸ் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.