| ADDED : மே 13, 2024 01:38 AM
சென்னை:சென்னை, அடையாறு இந்திரா நகரில், 'எஸ் பேங்க்' செயல்பட்டு வருகிறது. அந்த வங்கியின் கிளை மேலாளராக பேட்ரிக் ஹாப்மேன் பணிபுரிந்து வந்தார். இவர், 2022 டிச., 3ம் தேதி, தன் உயர் அதிகாரியிடம், 'துபாயில் உள்ள என் மாமனார் உடல்நலக்குறைவால் அவதிப்படுகிறார். அவரை பார்க்கச் சொல்கிறேன்' எனக்கூறி விடுமுறை எடுத்துச் சென்றார். பின் வங்கிக்கு திரும்பவில்லை.சில நாட்கள் கழித்து, வங்கி வாடிக்கையாளர்கள் பணத்தை கையாடல் செய்துவிட்டதாக, அவர் மீது புகார்கள் வந்தன.இது தொடர்பாக, வங்கியின் வாடிக்கையாளர்கள் பவன் ஜெயின் மற்றும் இங்கிலாந்தில் வசித்து வரும் வெளிநாடு வாழ் இந்தியர்களான ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி பானுமதி ஆகியோர் புகார் அளித்தனர்.தம்பதி கணக்கில் 7.50 கோடி ரூபாய், பவன் ஜெயின் உட்பட வேறு சிலரின் வங்கி கணக்கில் இருந்து மாயமானதாக, 12 கோடி ரூபாய் கையாடல் செய்துள்ளதாக, அந்த புகாரில் அவர்கள் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து வங்கி அதிகாரிகள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள பேட்ரிக் ஹாப்மேனுக்கு, சி.பி.ஐ., வாயிலாக, 'ரெட் கார்னர்' நோட்டீஸ் வழங்கி உள்ளனர். வெளிநாடுகளில் பதுங்கி இருக்கலாம் என்பதால், இன்டர்போல் எனும் சர்வதேச போலீசாரின் உதவியும் நாடப்பட்டுள்ளது.