உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆய்வு கூட்ட காலதாமதம் தவிர்க்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு டேப்

ஆய்வு கூட்ட காலதாமதம் தவிர்க்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு டேப்

சென்னை:சென்னை மாநகராட்சியில் கல்வி, சுகாதாரம், கட்டுமானம், சாலை, திடக்கழிவு போன்ற பல்வேறு துறைகளின் துணை கமிஷனர்கள், ஆன்லைனில் ஆய்வுக் கூட்டம் நடத்துவர்.இதற்காக, அனைத்து மண்டல அலுவலகங்களிலும், பெரிய திரை பொருத்தப்பட்டிருக்கும். இங்கு அந்தந்த மண்டல உதவி கமிஷனர், பொறியாளர், சுகாதார அதிகாரிகள் கூடி,'ஆன்லைன்' கூட்டத்தில் பங்கேற்பர். இதற்கு, அந்தந்த வார்டுகளில் இருந்து அதிகாரிகள், மண்டல அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். இதனால், வார்டுகளில் அன்றாட பணிகள் பாதிக்கும்.சில கூட்டங்கள், நேரடியாக துணை கமிஷனர்கள், கமிஷனர் தலைமையில், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை அலுவலகத்தில் நடைபெறும். இதற்கு, 15 மண்டலங்களில் உள்ள அதிகாரிகள், ரிப்பன் மாளிகை செல்ல வேண்டும். இதனாலும், மண்டலங்களில் பணிகள் பாதிக்கப்படும். பல்வேறு சேவைகளுக்காக அதிகாரிகளை தேடிச் செல்லும் பொதுமக்கள், இதனால் ஏமாற்றத்துடன் திரும்புவர். இதைத் தவிர்க்க, முக்கிய அறிவிப்பு மற்றும் ஆய்வுக் கூட்டங்களை, இருக்கும் இடத்தில் இருந்தே அதிகாரிகள் தெரிந்து கொள்ளும் வகையில், மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, அதிகாரிகளுக்கு, 25,000 ரூபாய் மதிப்பிலான கையடக்க கணினி எனும், 'டேப்' வழங்க முடிவு செய்துள்ளது.முதற்கட்டமாக செயற்பொறியாளர்கள், மண்டல உதவி கமிஷனர், மேற்பார்வை பொறியாளர்கள், தலைமை பொறியாளர், மண்டல வருவாய் மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு, 'டேப்' வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இத்திட்டம், இம்மாதம் முதல் செயல்பாட்டிற்கு வர உள்ளது. இதன் வாயிலாக மண்டலம், வார்டு அளவில் நடைபெறும் பணியில் வேகம் அதிகரிக்கும்.பொதுமக்களும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை எளிதில் காண முடியும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ