உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தாம்பரம் --- மதுரவாயல் பைபாஸ் சாலையில் டயர் வெடித்து கவிழ்ந்த லாரியால் நெரிசல்

தாம்பரம் --- மதுரவாயல் பைபாஸ் சாலையில் டயர் வெடித்து கவிழ்ந்த லாரியால் நெரிசல்

போரூர், தாம்பரத்தில் இருந்து போரூர் நோக்கி, நேற்று காலை 6:00 மணியளவில், 'எம் - சாண்ட்' ஏற்றி லாரி சென்றது. போரூர் சுங்கச்சாவடிக்கு 2 கி.மீ., துாரத்திற்கு முன், தாம்பரம் -- மதுரவாயல் பைபாஸ் ஆறுவழிச்சாலையில் சென்றபோது, திடீரென லாரியின்பின் பக்க டயர் வெடித்தது. இதையடுத்து, ஓட்டுனர் பழனியின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தாறுமாறாக ஓடி சாலை தடுப்பில் மோதி, குறுக்கே கவிழ்ந்தது. இதில், ஓட்டுனர் பழனி, 42, அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயர் தப்பினார். இந்த விபத்தில் லாரியில் இருந்த 'எம் - சாண்ட்' முழுதும் சாலையில் கொட்டியது. இதனால், தாம்பரம் - போரூர் சுங்கச்சாவடி சாலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது, 1.5 கி.மீ., துாரத்திற்க வாகனங்கள் அணிவகுத்து நின்றன.தகவல் அறிந்து வந்த போரூர் போக்குவரத்து ஆய்வாளர் ஜெயகுமார் தலைமையிலான போலீசார், மதுரவாயலில் இருந்து தாம்பரம் செல்லும் பைபாஸ் சாலையில், ஒரு வழிப்பாதையாக வாகனங்களை திருப்பி விட்டனர்.அத்துடன், கிரேன் வாயிலாக சாலையில் நடுவே கவிழ்ந்து கிடந்த லாரியை அப்புறப்படுத்தினர். அதன் பின், சாலையில் கொட்டி கிடந்த 'எம் - சாண்டை' பொக்லைன் வாயிலாக அகற்றினர். இரண்டு மணி நேரத்திற்கு பின், போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இந்த விபத்து காரணமாக ஏற்பட்ட நெரிசலால் ஆம்னி பேருந்து பயணியர், அலுவலகம் செல்வோர், மாணவர்கள் கடும் அவதிப்பட்டனர். விபத்து குறித்து, பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி