மையத்தடுப்பில் மோதிய மினி பஸ் குன்றத்துாரில் 10 பேர் படுகாயம்
குன்றத்துார் : குன்றத்துார், ஆகாஷ் நகரை சேர்ந்த ஸ்ருதி, 26, என்பவருக்கும், வேலுார் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன், 29, என்பவருக்கும், நேற்று முன்தினம் குடியாத்தத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.இதில் பங்கேற்ற பெண்ணின் உறவினர்கள் 50 பேர், தனியார் 'டிராவல்ஸ்' நிறுவன மினி பேருந்தில், குன்றத்துார் திரும்பி வந்தனர்.பேருந்தை வினோத், 40, ஓட்டிச் சென்றார். குன்றத்துார் அருகே சிறுகளத்துார் பகுதியை, நள்ளிரவு 12:30 மணிக்கு பேருந்து கடந்த போது, சாலையின் குறுக்கே துவங்கும் மையத்தடுப்பில் எதிர்பாராதவிதமாக மோதியது.இதில், பேருந்தின் முன்பகுதி சேதமடைந்தது. பேருந்தில் பயணித்த ஒன்பது பெண்கள், ஒரு ஆண் என, 10 பேர் காயமடைந்தனர். இவர்களை, குன்றத்துார் போலீசார் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.
எச்சரிக்கை பலகை அவசியம்
நெடுஞ்சாலையில், பல இடங்களில் மையத்தடுப்பு துவங்கும் பகுதியில் எச்சரிக்கை பலகை, இரவில் ஒளிரும் பட்டைகள் அமைக்கப்படுவதில்லை. இதனால், நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள், சாலையின் குறுக்கே திடீரென துவங்கும் மையத்தடுப்பில் மோதி விபத்தில் சிக்குகின்றன.எனவே, நெடுஞ்சாலையில் மையத்தடுப்பு துவங்கும் இடங்களில், அறிவிப்பு பலகை, ஒளிர் பட்டைகள் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.