ரத்து செய்த 100 ரயில்கள் மீண்டும் இயக்கம்?
சென்னை, சென்னை ரயில்வே கோட்டத்தில், ரயில் பாதை பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடக்கின்றன. அதனால், சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, அரக்கோணம் தடத்தில் 54 மின்சார ரயில்களும், கடற்கரை - தாம்பரம் தடத்தில் 30க்கும் மேற்பட்ட ரயில்களும், மறு அறிவிப்பு வரும் வரையில் ரத்து செய்யப்பட்டுள்ளன. காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்ட நெரிசலில், பயணியர் சிக்கி அவதிப்படுகின்றனர்.திருநின்றவூர் ரயில் பயணிகள் பொதுநலச் சங்கத்தின் செயலர் முருகையன் கூறியதாவது: பராமரிப்பு பணியை காரணமாக கூறி, இந்த ஆண்டில் மட்டும் 100க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. புறநகர் மின்சார ரயில்களில் பயணியர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மின்சார ரயில்களின் சேவை குறைப்பது நல்லது அல்ல. ரத்து செய்யப்பட்ட மின்சார ரயில்களை உடனடியாக மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். நெரிசல் மிக்க நேரங்களில் கூடுதலாக ரயில்களை இயக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.