பஸ், ரயில்களில் 14 லட்சம் பேர் 3 நாட்களில் சொந்த ஊர் பயணம்
சென்னை: தீபாவளி பண்டிகையொட்டி, சென்னையில் இருந்து மூன்று நாட்களில், அரசு பஸ்கள் மற்றும் ரயில்களில், 14 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர். தீபாவளிக்காக சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் வசிப்போர், சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக, கடந்த 16ம் தேதி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தெற்கு ரயில்வே சார்பில், 30 சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. நாளை தீபாவளி என்பதால், நேற்று சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இதனால், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்கள், கிளாம்பாக்கம், கோயம்பேடு பஸ் நிலையங்களிலும் பயணியர் கூட்டம் அலைமோதியது. தாம்பரம், குரோம்பேட்டை ஜி.எஸ்.டி., சாலை வாகனங்களால் நிரம்பி காணப்பட்டது. சென்ட்ரல், தாம்பரம், எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் முன்பதிவில்லாத பெட்டிகளில், நீண்ட வரிசையில் பயணியர் காத்திருந்து இடம்பிடித்தனர். கடந்த மூன்று நாட்களில் சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் மட்டும் ஆறு லட்சம் பேர், ரயில்களில் ஆறு லட்சம் பேர், ஆம்னி பஸ்களில் இரண்டு லட்சம் பேர் என, 14 லட்சம் பேர் சென்றுள்ளதாக போக்குவரத்து, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.