போதை ஒழிப்பு தின மாரத்தான் போட்டி 1,800 மாணவ - மாணவி ய ர் பங்கேற்பு
ஆவடி, ஆவடியில் நடந்த போதைப்பொருள் ஒழிப்பு தின மாரத்தான் போட்டியில், 1,800க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.ஆவடி போலீஸ் கமிஷனரகம் சார்பில், சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு மாரத்தான் போட்டி, திருமுல்லைவாயிலில் நேற்று காலை 6:00 மணிக்கு துவங்கியது. இதில், 58 கல்லுாரிகளை சேர்ந்த 1,215 மாணவர்கள், 624 மாணவியர் என, 1,839 பேர் பங்கேற்றனர்.போட்டி துவங்கும் முன், மாணவர்கள் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். பின், 'போதை வேணாங்க' எனத் துவங்கும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பாடல் வெளியிடப்பட்டது. மாரத்தான் போட்டியை, கமிஷனர் சங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். திருமுல்லைவாயில் போலீஸ் கன்வென்சன் சென்டரில் துவங்கிய மாரத்தான் ஓட்டம், சி.டி.எச்., சாலை வழியாக, 5 கி.மீ., துாரம் சென்று, மீண்டும் கன்வென்சன் சென்டரை வந்தடைந்தது.ஆண்கள் பிரிவில் முதலாவதாக வந்த முத்தமிழ்செல்வன் என்பவருக்கு, 5,000 ரூபாய் ரொக்க பரிசு; இரண்டு, மூன்றாவதாக வந்த விக்கி, விஷால் ஆகியோருக்கு முறையே, 4,000, 3,000 ரூபாய் ரொக்க பரிசு சான்றிதழ் வழங்கப்பட்டது. பெண்கள் பிரிவில், முதலாவதாக வந்த ஐஸ்வர்யா என்பவருக்கு, 5,000 ரூபாய் ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்; இரண்டு, மூன்றாவதாக வந்த விஷாலி, ஷாலு ஆகியோருக்கு முறையே, 4,000, 3,000 ரொக்க பரிசு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில், 35 இடங்கள் வரை பெற்ற மாணவ - மாணவியருக்கு ரொக்க பரிசும், சான்றிதழ் வழங்கப்பட்டது.