கிளாம்பாக்கம் மளிகை கடைக்குள் நள்ளிரவில் புகுந்த ஆம்னி பேருந்து 22 பயணியர் உயிர் தப்பினர்; 4 டூ-வீலர் சேதம்
கூடுவாஞ்சேரி,:சென்னையில் இருந்து ஊட்டி செல்வதற்காக, கோயம்பேடில் 22 பயணியருடன் புறப்பட்ட கே.பி.என்., ஆம்னி பேருந்து, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு, நேற்று முன்தினம் இரவு 10:10 மணிக்கு வந்தது.அங்கு, சில பயணியரை ஏற்றியதும், பின்புற நுழைவாயில் வழியாக, ரேவதிபுரம் கூட்டுச்சாலை வளைவில் திரும்பியபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அங்கிருந்த மின் கம்பத்தில் மோதி, அருகே உள்ள மளிகை கடைக்குள் புகுந்தது.இதில், மின்கம்பம் வளைந்து, மின் இணைப்பு தானாகவே துண்டிக்கப்பட்டு, அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது. மளிகை கடை அருகே நிறுத்தப்பட்டிருந்த நான்கு இருசக்கர வாகனங்களும் சேதமடைந்தன.இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணம் செய்த பயணியர் காயமின்றி உயிர் தப்பினர். விபத்து காரணமாக, அப்பகுதியில் ஒரு மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், விபத்தில் சிக்கிய பேருந்தை அப்புறப்படுத்தினர். மாற்று பேருந்தில் பயணியரை அனுப்பினர்.விபத்தை ஏற்படுத்திய ஆம்னி பேருந்து டிரைவர் செல்வராஜ், 44, என்பவரை கைது செய்து, போலீசார் விசாரிக்கின்றனர். ஊரப்பாக்கம் மின்வாரிய அதிகாரிகள், சேதமான மின்கம்பத்தை நேற்று காலை அகற்றி, புதிதாக அமைத்தனர்.