ரூ.6 லட்சம் திருப்பி தராத வாலிபரை கட்டி வைத்து தாக்கிய 3 பேர் கைது
கோயம்பேடு, வட்டிக்கு வாங்கிய 6 லட்சம் ரூபாய் திருப்பி தராத வாலிபரை, அறையில் கட்டி வைத்து தாக்கிய மூவரை, போலீசார் கைது செய்தனர்.ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் அனுாப்ரெட்டி துர்கா ராவ், 32, என்பவர், கோயம்பேடு போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.அதில் கூறியிருப்பதாவது:என் தம்பி அனுாப்ரெட்டி இயேசு பாபு, 24; கொத்தனார். இவர், சில நாட்களுக்கு முன் வேலைக்காக கோயம்பேடிற்கு வந்தார். அப்போது, என்னை போனில் அழைத்த நபர் ஒருவர், தம்பியை திருட்டு வழக்கில் போலீஸ் பிடித்து வைத்திருப்பதாகவும், 40,000 ரூபாய் கொடுத்தால் விடுவிப்பதாகவும் கூறினார். பின், உடனடியாக நண்பர் வாயிலாக பணத்தை ஆன்லைனில் அனுப்பினேன்.அதே நபர் மீண்டும் அழைத்து, தம்பியை கடத்தி வைத்திருக்கிறோம்; 6 லட்சம் ரூபாய் கொடுத்தால் விடுவிப்போம் என மிரட்டினார். என் மொபைல் போனில் வீடியோ ஒன்று வந்தது. அதில் தம்பியை கட்டி வைத்து சித்ரவதை செய்வது போல் பதிவாகிஇருந்தது.இவ்வாறு புகாரில் குறிப்பிட்டிருந்தார்.கோயம்பேடு போலீசார் விசாரித்து, குற்றவாளிகள் பதுங்கி இருந்த கூடுவாஞ்சேரி வீட்டில் அதிரடியாக நுழைந்தனர். அங்கு ரத்த காயங்களுடன் கட்டப்பட்டிருந்த அனுாப்ரெட்டி இயேசு பாபுவை மீட்டனர். தப்பியோட முயன்ற இரண்டு பெண்கள் உட்பட மூவரை பிடித்து விசாரித்தனர். ஒரே குடும்பத்தினர்
இதில், ஆந்திராவைச் சேர்ந்த சுசீலா, 52, அவரது மகன் வினய், 32, மகள் பிரசாந்தி என்பது தெரிந்தது. கட்டட தொழிலாளர்களான சுசீலா குடும்பத்தினர், பெங்களூரில் பணிபுரியும் போது அனுாப்ரெட்டி இயேசு பழக்கமாகி உள்ளார்.அப்போது சுசிலாவிடம் ஆறு லட்சம் ரூபாய் அனுாப்ரெட்டி இயேசு பாபு கடன் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் வாங்கிய பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி உள்ளார்இந்த நிலையில், அனுாப்ரெட்டி பாபு சென்னை வந்ததை அறிந்த சுசிலா குடும்பத்தினர், அவரை கடத்தி பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது.மூவரையும் கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.இந்த நிலையில், கோயம்பேடில் இருந்த ஆந்திரா வாலிபரை கடத்துவதற்கு உறுதுணையாக செயல்பட்ட கோயம்பேடு போலீஸ்காரர்கள் வினோத்குமார், பாலமுருகன் ஆகிய இருவரையும், காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி, மேற்கு மண்டல இணை கமிஷனர் திஷா மிட்டல் உத்தரவிட்டார்.