30,000 ரூபாய்க்காக நாடகமாடிய பீஹார் நபர்
அண்ணா நகர், பீஹாரைச் சேர்ந்தவர் சுனில்குமார், 28; சென்னை, அண்ணா நகரில் உள்ள பிரபல ஹோட்டலில் தங்கி பணிபுரிகிறார். இவரது சகோதரர் சுகுத்குமார், 29, அதே ஹோட்டலின் இ.சி.ஆர்., கிளையில் பணிபுரிகிறார்.நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, நள்ளிரவு வரை தங்கியிருந்த அறைக்கு சுனில்குமார் செல்லவில்லை.நள்ளிரவு 1:00 மணிக்கு, சுனில்குமாரின் மொபைல் எண்ணில் இருந்து, அவரது அண்ணன் சுகுத்குமாருக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய சுனில்குமார், மர்ம நபர்கள் தன்னை காரில் கடத்தியதாகவும், விடுவிக்க 30,000 ரூபாயை தன் வங்கி கணக்கிற்கே அனுப்பச் சொல்வதாகவும் கூறி, இணைப்பை துண்டித்துள்ளார். அதிர்ச்சியடைந்த சுகுத்குமார், அண்ணா நகர் ஹோட்டல் மேலாளருக்கு தகவல் தெரிவித்தார்.இதையடுத்து அண்ணா நகர் போலீசார், சுனில்குமாரின் மொபைல் சிக்னலை வைத்து, அதிகாலை வரை விடிய விடிய தேடினர்.பின், 5:45 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் பதுங்கியிருந்த சுனில்குமாரை போலீசார் மீட்டனர்.விசாரணையில், அவரை யாரும் கடத்தவில்லை என்பதும், அவருக்கு கடன் பிரச்னை இருப்பதால், அதை அடைப்பதற்காக சகோதரனிடம் பணம் வாங்குவதற்காக கடத்தல் நாடகமாடியதும் தெரிந்தது. போலீசார் அவரை, எச்சரித்து அனுப்பினர்.