6 சவரன் தாலி செயின் போலீசிடம் மாணவன் ஒப்படைப்பு
சென்னை: சென்னை, வானகரம், ராஜாகுப்பம் பகுதியைச் சேர்ந்த பவானி, 35, நேற்று முன்தினம் மாலை, வீட்டின் அருகே உள்ள பூங்காவிற்கு சென்றார். அப்போது, அவர் அணிந்திருந்த ஆறு சவரன் தாலி செயின் காணாமல் போனது. நேற்று, அந்த வழியாக சென்ற சபீரா, 45, என்ற பெண், அந்த தாலி செயினை கண்டெடுத்தார். அவர், அங்கிருந்தோர் தங்களுக்கு சொந்தமானது இல்லை எனக்கூறியதை அடுத்து, தாலி செயினை வீட்டிற்கு எடுத்துச் சென்றார். தாயின் அறிவுரைப்படி, அவரது 19 வயது மகன், கல்லுாரி மாணவரான அஸ்கர் பாஷா, தாலி செயினை வானகரம் போலீசில் ஒப்படைத்தார். அதை பெற்ற போலீசார், மாணவரை பாராட்டியதோடு, செயினை தவறவிட்ட பெண்ணிடம் ஒப்படைத்தனர்.