76 வயது மூதாட்டிக்கு சிறுநீரக கட்டி அகற்றம்
சென்னை, சென்னையில் உள்ள, 'ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆப் நெப்ராலஜி அன்ட் யூராலஜி' என்ற ஏ.ஐ.என்.யு., மருத்துவமனையில், 'லேப்ரோஸ்கோபிக்' அறுவை சிகிச்சை வாயிலாக, 76 வயது மூதாட்டிக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் வெங்கட் சுப்பிரமணியம் கூறியதாவது: மூதாட்டிக்கு எவ்வித அறிகுறியும் இல்லாத நிலையில், வழக்கமான மருத்துவ பரிசோதனையின்போது, சிறுநீரகத்தில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. உயர் ரத்த அழுத்த பாதிப்புள்ள அவருக்கு, ரத்த சோகை காரணமாக, பலமுறை ரத்த மாற்றப்பட்டுள்ளது. இந்த கட்டி கண்டறியப்பட்டதும், மூதாட்டிக்கு மருத்துவமனை நிர்வாக இயக்குநர் அருண்குமார் பாலகிருஷ்ணன் தலைமையில், 'லேப்ரோஸ்கோபிக்' அறுவை சிகிச்சை மூலம், சிறுநீரகத்தில் இருந்த, 10 செ.மீ., கட்டி அகற்றப்பட்டது. நுண்துளையீட்டு முறையில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையால், மூதாட்டிக்கு வலி இல்லாமல் இருந்தது. தற்போது, அவரது சிறுநீரகம் சிறப்பாக செயல்பட்டதோடு, விரைந்து குணமடைந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.