உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திடீரென பின்னால் வந்த ரோடு ரோலர் சக்கரத்தில் சிக்கி மாற்றுத்திறனாளி பலி மாநகராட்சி அதிகாரி சஸ்பெண்ட்

திடீரென பின்னால் வந்த ரோடு ரோலர் சக்கரத்தில் சிக்கி மாற்றுத்திறனாளி பலி மாநகராட்சி அதிகாரி சஸ்பெண்ட்

கோயம்பேடு, சாலை போடுவதற்காக இயக்கப்பட்ட 'ரோடு ரோலர்' வாகனம், திடீரென பின்னால் வந்ததால், அதன் சக்கரத்தில் சிக்கிய மாற்றுத்திறனாளி நபர், மனைவி கண் முன் பரிதாபமாக பலியானார். கோயம்பேடு, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர் ராஜ், 55; கால் ஊனமுற்றவர். இவர், மனைவி சாந்தலட்சுமியுடன், அதே பகுதி விநாயகர் கோவில் அருகில், வடக்கு மாடவீதியில் நின்று நேற்று மாலை பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அவர்களுக்கு முன்னால், சாலை அமைக்கும் பணியில் 'ரோடு ரோலர்' வாகனம் ஈடுபடுத்தப்பட்டது. வாகனத்தை, அதன் ஓட்டுநர் தாறுமாறாக ஓட்டியதால், முன்னால் செல்ல வேண்டிய ரோடு ரோலர் வாகனம் பின்னால் வந்ததில், அதன் சக்கரத்தின் அடியில் சிக்கிய பாஸ்கர்ராஜ், மனைவியின் கண்முன்னே துடிதுடித்து மயங்கினார். அங்கிருந்தோர் உதவியுடன் அவரை மீட்டு, அதேபகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தபோது, பரிசோதித்த மருத்துவர், வரும்வழியில் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். கோயம்பேடு போலீசார், உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அதேபகுதியில் உள்ள குறுங்காலீஸ்வரர் கோவில் தேர் வெள்ளோட்டத்தை முன்னிட்டு, ஒப்பந்த அடிப்படையில் வடக்கு மாடவீதி சாலையை சீரமைக்கும் பணி நடந்து வருவது தெரிந்தது. அதன் ஓட்டுநர் அஜாக்கிரதையாக ரோடு ரோலர் வாகனத்தை இயக்கியதில், மாற்றுத்திறனாளியான பாஸ்கர்ராஜால் உடனடியாக நகர்ந்து செல்ல முடியாமல், விபத்தில் சிக்கியது, போலீசாரின் விசாரணையில் தெரிந்தது. விபத்து ஏற்படுத்தி தப்பியோடிய ரோடு ரோலர் வாகன ஓட்டுநரான, திருவண்ணாமலையைச் சேர்ந்த வெங்கடேசனை, போலீசார் தேடி வருகின்றனர். சாலை பணியை கண்காணிக்காமல் அலட்சியமாக செயல்பட்டதாக, கோடம்பாக்கம் மண்டலம் 127வது வார்டு உதவி பொறியாளர் வீரராகவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ