உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 3.50 லட்சம் சொத்துக்களில் மீண்டும் கள ஆய்வு!:அரசின் அனுமதி கோரும் அதிகாரிகள் அளவீடுக்கேற்ப வரியில் மாற்றம் வரும்

3.50 லட்சம் சொத்துக்களில் மீண்டும் கள ஆய்வு!:அரசின் அனுமதி கோரும் அதிகாரிகள் அளவீடுக்கேற்ப வரியில் மாற்றம் வரும்

சென்னை: மக்கள் எதிர்ப்பால் சொத்து வரி உயர்வை நிறுத்தி வைப்பதாக அறிவித்த சென்னை மாநகராட்சி, அடுத்த கட்டமாக வரி ஏய்ப்பு செய்துள்ளதாக சந்தேகப்படும், 3.50 லட்சம் சொத்துக்களை மீண்டும் கள ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது. அளவீட்டில் மாற்றம் இருந்தால், சொத்து வரியிலும் மாற்றம் வரும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகரட்சியில், 14 லட்சம் சொத்து உரிமையாளர்கள் உள்ளனர். இவர்களின் வாயிலாக மாநகராட்சிக்கு ஆண்டுக்கு, 2,200 கோடி ரூபாய், சொத்து வரி கிடைத்து வருகிறது. இதில், பெரும்பாலான சொத்துக்களுக்கான வரி, உரிமையாளர் அளித்த சுய அறிவிப்பு வாயிலாக வசூலிக்கப்பட்டு வருகிறது. அதேநேரம், பலர் உண்மையான சொத்துக்களை மறைத்து, மாநகராட்சிக்கு குறைந்த அளவிலான சொத்துவரியை செலுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள மாநகராட்சி, சொத்துக்களை, 'ட்ரோன்' வாயிலாக மறு மதிப்பீடு செய்து, அதற்கேற்ப சொத்து வரி மாற்றி அமைக்கப்பட்டது. இதில், பல மடங்கு சொத்துவரி உயர்ந்ததாக, பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும், சொத்து வரி உயர்த்தியது குறித்து, தங்களுக்கு அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என, தி.மு.க.,வைச் சேர்ந்த மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் குற்றம் சாட்டினர். பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக, நேற்று முன்தினம் இரவு, மாநகராட்சி கமிஷனர் சமீரன் அறிவித்தார். சொத்து வரி உரிமையாளர்கள், பழைய வரியை செலுத்தலாம். கூடுதலாக செலுத்தப்பட்ட பணம், அடுத்த அரையாண்டில் ஈடு செய்யப்படும் எனவும் அவர் அறிவித்தார். இந்நிலையில், சென்னையில் மொத்தமுள்ள 14 லட்சம் சொத்து உரிமையாளர்களில், 3.5 லட்சம் பேர், உண்மையான சொத்து விபரங்களை மறைத்து, வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் சொத்துவரி உயர்த்தப்படவில்லை. உயர்த்தியதாக தவறான தகவல் பரப்பப்பட்டது. மாநகராட்சிக்கு வரி ஏய்ப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டோருக்கு மட்டுமே, உண்மையான அளவீட்டின்படி சொத்து வரி உயர்த்தப்பட்டது. தற்போது, மறு சீராய்வில் உயர்த்தப்பட்ட சொத்துவரி நிறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், சந்தேகிக்கப்படும் 3.50 லட்சம் சொத்துக்கள் மறு ஆய்வு செய்யப்படும். அளவீடு அதிகமாக இருந்தால், சொத்து வரி உயர்வு வரும்; குறைவாக இருந்தால் அதற்கேற்ப மாற்றியமைக்கப்படும். அரசிடம் அனுமதி கிடைத்ததும் இதற்கான பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி