ஆக்கிரமிப்பு அகற்றிய இடத்தில் மதுகூடத்தின் வாகன நிறுத்தம்?
ஆவடி, அயப்பாக்கம் -- திருவேற்காடு பிரதான சாலையில், நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்ததாக கூறி, 15,000 சதுர அடியில் இருந்த ஒன்பது கடைகளை, கடந்தாண்டு நவம்பர் மாதம், ஆவடி தாசில்தார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இடித்து அகற்றினர். இந்நிலையில், அந்த இடத்திற்கு பின் பக்கம் உள்ள மதுபான கூடம், அந்த இடத்தில் மணலை கொட்டி, மதுபிரியர்கள் வாகனங்களை நிறுத்தும் இடமாக மாற்றிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து வழக்கறிஞர் கவிதா காந்தி கூறியதாவது: நீர்நிலை எனக் கூறி கடந்தாண்டு இங்கு இருந்த கடைகள் அகற்றப்பட்டன. ஆனால், அங்குள்ள மதுபான கூடம் அந்த இடத்தை வாகன நிறுத்தமாக பயன்படுத்தி வருகிறது. மதுபான கூடத்தின் ஆக்கிரமிப்பு குறித்து, திருவள்ளூர் கலெக்டர், ஆவடி தாசில்தார் ஆகியோருக்கு புகார் அளித்தும், அதிகாரிகள் கண்டும்காணாமல் உள்ளனர். இதனால், ஆவடி மாநகராட்சி வருவாய் பிரிவு மீது சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.