ஐபோன் - 16 ஆசைகாட்டி ரூ.2 லட்சம் லபக்கியவர் கைது
அம்பத்துார், நொளம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுளா, 47. இவர், கடந்த மார்ச் மாதம் அம்பத்துாரில் உள்ள பிரபல மொபைல் போன் ஷோரூமிற்கு 'ஐபோன்' வாங்குவதற்காக சென்றுள்ளார்.அப்போது, ஷோரூம் ஊழியரான மேல்மருவத்துாரைச் சேர்ந்த தீனதயாளன், 39, என்பவர், தன் பரிந்துரையில் மொபைல் போன் வாங்கினால், வட்டியில்லா தவணை முறையில், புதுவரவான 'ஐபோன் - 16' மொபைல் போன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.இதை நம்பிய மஞ்சுளா, மகளிர் குழு தோழியரிடமும் விபரத்தை கூறி ஒன்பது பேரை இணைத்துள்ளார். மொத்தமாக, அவர்களது ஆதார்; பான் உள்ளிட்ட தகவல்களை பெற்ற தீனதயாளன், அவர்களது வங்கி கணக்கில் இருந்து, மாதம் 2,746 ரூபாய் இ.எம்.ஐ., எனும் தவணை முறையில், தன் கணக்கிற்கு வரும்படி செய்துள்ளார்.அந்த வகையில், கடந்த ஒன்பது மாதங்களாக ஒன்பது பேரும் சேர்ந்து, 2 லட்சம் ரூபாய் வரை இ.எம்.ஐ., கட்டியுள்ளனர். இது குறித்து கேட்டபோது, அவர் மழுப்பலான பதில் அளித்துள்ளார். இதையடுத்து, மஞ்சுளா அம்பத்துார் போலீசில் புகார் அளித்தார்.இது குறித்து விசாரித்த போலீசார், மோசடியில் ஈடுபட்ட தீனதயாளனை நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.