தலைமறைவு குற்றவாளி உத்தர பிரதேசத்தில் கைது
வியாசர்பாடி, பாலியல் பலாத்கார வழக்கில், உத்தர பிரதேச மாநிலத்தில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை, போலீசார் கைது செய்தனர்.புழல், காவாங்கரையைச் சேர்ந்தவர் முகமது ஆரிப், 20. இவரை, கடந்த 2020 டிசம்பர் மாதம் பாலியல் பலாத்கார வழக்கிற்காக, எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.சிறையிலிருந்து வெளியே வந்த முகமது ஆரிப், கடந்த 2022ல் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கூடுதல் மகிளா நீதிமன்ற நடுவர் பிடிவாரண்ட் பிறப்பித்தார்.இந்த உத்தரவின்படி எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார், முகமது ஆரிப்பை தேடி உத்தர பிரதேச மாநிலம், ஷதாபர் கிராமம் சென்று, அங்கு பதுங்கி இருந்தவரை 17ம் தேதி கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனர். நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.