ரேஸ்கோர்ஸ் நிலத்தில் பூங்கா வரைபடம் தயாரிக்க நடவடிக்கை
சென்னை, கிண்டி ரேஸ்கோர்ஸ் நிலத்தில், தோட்டக்கலை பூங்கா அமைப்பதற்கான வரைபடம், திட்ட மதிப்பீடு தயாரிப்புக்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளது.கிண்டியில் ரேஸ்கோர்ஸிற்கு குத்தகை விடப்பட்டிருந்த 160 ஏக்கர் அரசு நிலத்திற்கு, 730 கோடி ரூபாய் வாடகை பாக்கி வைக்கப்பட்டு இருந்தது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த நிலத்தை வருவாய்துறையினர் மீட்டனர்.பிரம்மாண்ட பூங்கா அமைப்பதற்காக, இங்குள்ள 118 ஏக்கர் நிலம், தோட்டக்கலை துறைக்கு பரிமாற்றம் செய்யப்பட்டது. எஞ்சிய இடத்தில், சென்னை மாநகராட்சி வாயிலாக, மூன்று குளங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது.தோட்டக்லை பூங்கா அமைப்பதற்கான முன்னேற்பாடுகளை, தோட்டக்கலைத்துறை துவங்கியுள்ளது. பூங்கா அமைப்பதற்கு வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு தயாரிப்பு பணிகள், தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளன. இதற்கான தேர்வு ஜூலை 7ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.பூங்கா அமையவுள்ள இடத்தை வேளாண் துறை செயலர் தட்சிணாமூர்த்தி, தோட்டக்கலைத்துறை இயக்குனர் குமரவேல் பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.