முதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு அ.தி.மு.க., கவுன்சிலர் ஏமாற்றம்
சென்னை:சென்னை மாநகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர் கதிர்முருகன், முதல்வரை சந்திக்க முயன்றபோது, போலீசார் தடுத்ததால், அவர் ஏமாற்றத்துடன் திரும்பினார். சென்னை மாநகராட்சி, 170வது வார்டு, தரமணியில் எம்.எஸ்.சுவாமிநாதனின் நுாற்றாண்டு விழா, நேற்று சிறப்பிக்கப்பட்டது. இதில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில், 170வது வார்டு, அ.தி.மு.க., கவுன்சிலர் கதிர்முருகன் பங்கேற்றார். விழா முடிந்ததும், கதிர்முருகன் ஒரு புத்தகம் , ஒரு மனுவுடன் முதல்வரை சந்திக்க ஓடினார். அப்போது, போலீசார் அவரை வழிமறித்து தடுத்து நிறுத்தினர். அவர் கவுன்சிலர் என கூறியும் அனுமதிக்காததால், அவர் ஏமாற்றத்துடன் திரும்பினார். கவுன்சிலர் கதிர்முருகனிடம் கேட்டபோது, “என் வார்டில் உள்ள நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்றதால், அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து, மக்கள் பிரச்னை குறித்து முக்கிய மனு ஒன்றை வழங்க முயன்றேன். போலீசார் என்னை தடுத்து விட்டனர். மிகவும் மன உளைச்சலுடன் திரும்புகிறேன்” என்றார். உளவுத்துறை போலீசார் கூறியதாவது: பாதுகாப்பு தலைமை அதிகாரியிடம், கவுன்சிலர் முன்பே கூறி இருந்தால், முதல்வரை சந்திக்க அனுமதி வழங்கி இருப்போம். விழா அரங்கில் நின்ற போலீசார், கவுன்சிலர் குறித்தும், அவர் முதல்வரை சந்திக்க முயன்றதன் முக்கியத்துவம் குறித்தும் தெரியாமல் தடுத்து விட்டனர். இருந்தாலும், கவுன்சிலர் சந்திக்க வந்தது குறித்து, முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.