ஏர் இந்தியா விமானம் மக்கர் 168 பேர் சிங்கப்பூரில் தங்க வைப்பு
சென்னை:சிங்கப்பூரில் இருந்து சென்னை வரவேண்டிய, 'ஏர் இந்தியா' பயணியர் விமானம், இயந்திர கோளாறு காரணமாக திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால், சென்னைக்கு வரவிருந்த 168 பயணியர் அவதிக்குள்ளாகினர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, 'ஏர் இந்தியா' பயணியர் விமானம், நேற்று அதிகாலை சிங்கப்பூர் சென்றது. பின், அங்கிருந்து பிற்பகல் 3:30 மணிக்கு சென்னை புறப்பட்டது. அதில் 168 பயணியர் இருந்தனர். ஆனால், திடீரென இயந்திர கோளாறு ஏற்படவே, புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து விமான பொறியாளர்கள் குழுவினர் விமானத்தை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் விமானம் பழுது பார்த்து முடிக்கப்படாததால், விமானம் ரத்து செய்யப்பட்டது. இன்று காலை சென்னை புறப்பட்டு வரும் என, ஏர் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை வரவேண்டிய 168 பயணியர் சிங்கப்பூரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.