பெருங்களத்துார்: பெருங்களத்துாரில், ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட முன்விரோதத்தில், பா.ஜ., பிரமுகரை வெட்டிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். பீர்க்கன்காரணை, சீனிவாசா நகரை சேர்ந்தவர் செந்தில், 33. பா.ஜ., விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு, பீர்க்கன்காரணை மண்டல செயலராக உள்ளார். இவரும், அதே பகுதியை சேர்ந்த நந்தா, 35, என்பவரும் சேர்ந்து, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனர். இதில் ஏற்பட்ட பிரச்னையால், ஓராண்டுக்கு முன் பிரிந்து விட்டனர். இதனால், இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நவ., 16ம் தேதி, புதுபெருங்களத்துார், சீனிவாசா நகர், ரயில்வே சுரங்கப்பாதை அருகே, செந்தில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, நான்கு பேர் வழிமறித்து, சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதில், தலையில் காயமடைந்த செந்தில், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக, பீர்க்கன்காரணை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். பின், செந்திலை வெட்டிய பெருங்களத்துார், காமராஜர் நகரை சேர்ந்த சுதாகர் என்கிற கானா சுதாகர், 27, அகரம்தென் பகுதியைச் சேர்ந்த நரேஷ்குமார், 26, பதுவஞ்சேரியை சேர்ந்த விஜய், 26, விக்னேஷ், 24, ஆகிய நான்கு பேரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.