பேருந்தில் டிக்கெட் பரிசோதகர் நடத்துநர் இடையே வாக்குவாதம்
அம்பத்துார்: செங்குன்றத்தில் இருந்து மேற்கு தாம்பரத்திற்கு தடம் எண்: 104 பேருந்து இயக்கப்படுகிறது. நேற்று காலை, 50க்கும் மேற்பட்ட பயணியருடன், செங்குன்றம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டது.அம்பத்துார் கனரா வங்கி பேருந்து நிலையம் அருகே வந்தபோது, டிக்கெட் பரிசோதகர் இருவர் பேருந்தில் ஏறி பயணியரிடம் டிக்கெட் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பயணி ஒருவர் டிக்கெட் எடுக்காமல் பயணித்தது தெரிந்தது.டிக்கெட் பரிசோதகர், அவருக்கு அபராதம் விதித்ததோடு, நடத்துநருக்கு 'மெமோ' வழங்கவும் முயன்றுள்ளார். அதே நேரத்தில், 'டிக்கெட் பரிசோதகர் மது போதையில் இருப்பதாகவும், அவர் மீது மது வாடை வீசுவதாகவும்' பயணியர் நடத்துநரிடம் கூறியுள்ளனர். இதனால், டிக்கெட் பரிசோதகர் -- நடத்துநர் இடையே வாக்குவாதம் முற்றியது.பேருந்தில் இருந்த பயணி ஒருவர், டிக்கெட் பரிசோதகர் - - நடத்துநர் இடையே நடந்த வாக்குவாதத்தை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். அது வேகமாக பரவி வருகிறது. இது குறித்து இருதரப்பிலும் எவ்வித புகாரும் பெறப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.