ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற உதவி பொறியாளர் மீது தாக்குதல்
சென்னை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற உதவி பொறியாளர் தாக்கப்பட்டதை தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் மூவரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர். தேனாம்பேட்டை மண்டல உதவி செயற்பொறியாளர் வித்யா, உதவி பொறியாளர் சவுந்தராஜ் உள்ளிட்ட மாநகராட்சி ஊழியர்கள் கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள பத்ரிகரை பகுதியில் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றனர். உபயோகமற்ற தண்ணீர் பந்தல், தி.மு.க., அ.தி.மு.க., கட்சி கொடி கம்பங்களை அகற்றிய அதிகாரிகள் தொடர்ந்து, பா.ஜ.,கொடி கம்பத்தை அகற்ற முற்பட்டபோது அப்பகுதியை சேர்ந்த சிலர் மாநகராட்சி அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர்கள், உதவி பொறியாளர் சவுந்தராஜை தாக்கியுள்ளனர். இதுகுறித்து, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் உதவி செயற்பொறியாளர் வித்யா புகார் அளித்தார். தாக்குதலில் ஈடுபட்ட மூவரை போலீசார் பிடித்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.