குடிக்க பணம் கேட்டு தொந்தரவு அண்ணனை கொன்ற தம்பி கைது
அயனாவரம்,குடிக்க பணம் கேட்டு தகராறு செய்த அண்ணனை, கத்தியால் குத்தி கொலை செய்து, உடலை வீட்டிற்குள் வைத்து பூட்டிய தம்பியை, போலீசார் கைது செய்தனர். அயனாவரம், கரியமாணிக்கம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாபு, 35; ஆட்டோ ஓட்டுநர். மதுவிற்கு அடிமையானதால், இவரது மனைவி, இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிரிந்து, தனியாக வசிக்கிறார். பாபு, அவரது தம்பி சிவா மற்றும் தாய் தமிழரசியுடன் வசிக்கிறார். தினமும் குடித்துவிட்டு வரும் பாபு, தாய் மற்றும் தம்பியிடம் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் போதையில் வந்த பாபு, இரவு முழுதும் தகராறு செய்துள்ளார். இதனால், தமிழரசி நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, அதே பகுதியில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் துாங்கிய பாபு, காலை 9:00 மணிக்கு, குடிக்க பணம் கேட்டு, தம்பி சிவாவிடம் மீண்டும் தகராறு செய்துள்ளார். அதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, சமையல் அறையில் இருந்த கத்தியால், சிவாவை பாபு குத்த முயன்றார். ஆத்திரமடைந்த சிவா, கத்தியை பறித்து, பாபுவின் கழுத்தில் சரமாரியாக குத்தி கொலை செய்தார். பின், வீட்டை பூட்டிவிட்டு தப்பியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அயனாவரம் போலீசார், வீட்டின் பூட்டை உடைத்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த பாபுவின் உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், தப்பி ஓடிய சிவாவை நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.