மத்திய உளவு பிரிவு அதிகாரி மயங்கி விழுந்து பரிதாப பலி
சென்னை, திருவல்லிக்கேணி, ஸ்ரீ சாய் உணவகத்தில் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும் போது மயங்கி விழுந்து மத்திய உளவு பிரிவு அதிகாரி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.சென்னை, பொன்மார், தனலட்சுமி நகர் எஸ்.பி.என்., தெருவில் வசித்தவர் பாலமுருகன், 60; மத்திய உளவு பிரிவு அதிகாரி.இன்னும் சில மாதங்களில் பணி ஓய்வு பெற உள்ளதாலும், பொன்மாரிலிருந்து தினமும் வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டதாலும், திருவல்லிக்கேணியில் ஒரு விடுதியில் தங்கி, வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை 9:15 மணிக்கு பணிக்கு புறப்பட்டபோது, மயக்கம் வருவது போல இருந்ததால், திருவல்லிக்கேணி ஓ.வி.எம்., தெருவில் உள்ள ஸ்ரீ சாய் உணவகத்தில் தண்ணீர் வாங்கி குடித்தார். அப்போது, திடீரென மயங்கி விழுந்தார்.சம்பவ இடத்திற்கு வந்த, '108' ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்கள் பரிசோதனை செய்ததில், அவர் இறந்தது தெரிந்தது.திருவல்லிக்கேணி போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்துாரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர்.