9 இடங்களில் சார்ஜிங் மையம்; தனியார் ஒப்பந்த நிறுவனம் தேர்வு
சென்னை; சென்னையில், மின் வாகனங்களுக்கு 'சார்ஜிங்' செய்ய, ஒன்பது இடங்களில் மையங்கள் அமைக்கும் பணிக்கு, தனியார் ஒப்பந்த நிறுவனத்தை, பசுமை எரிசக்தி கழகம் தேர்வு செய்துள்ளது. தமிழகம் உட்பட நாடு முழுதும், மின் வாகனங்களுக்கு தடையின்றி 'சார்ஜிங்' வசதி கிடைக்க, தேசிய நெடுஞ்சாலையில், 25 கி.மீ., துாரத்துக்கு ஒன்றும், மாநகரங்களில், 3 கி.மீ., துாரத்துக்கு ஒன்றும் என, சார்ஜிங் மையங்களை அமைக்க, பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. எனவே, தமிழகத்தில், 500 சார்ஜிங் மையங்களை மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து, மின் வாரியத்தின் துணை நிறுவனமான பசுமை எரிசக்தி கழகம் அமைக்க உள்ளது. முதல் கட்டமாக, சென்னையில் மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா, பெசன்ட் நகர் கடற்கரை, மெரினா கடற்கரை, செம்மொழி பூங்கா உட்பட, ஒன்பது இடங்களில் 'சார்ஜிங்' மையங்கள் அமைக்க, தனியார் நிறுவனங்களுக்கு, கடந்த ஆகஸ்டில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் பங்கேற்ற நிறுவனங்களில், 'ரிலக்ஸ் எலக்ட்ரிக்' நிறுவனம் தேர்வாகி உள்ளது. அந்நிறுவனத்துக்கு, ஓரிரு தினங்களில் ஒப்புதல் கடிதம் அளிக்கப்பட உள்ளது. அந்நிறுவனம், தன் செலவில், சார்ஜிங் மையம் அமைத்து பராமரிக்க வேண்டும். இதற்காக வசூலிக்கப்படும் கட்டணத்தில் இருந்து கிடைக்கும் வருவாயை, அந்நிறுவனம், பசுமை எரிசக்தி கழகம், மாநகராட்சி ஆகியவை பகிர்ந்து கொள்ளும்.