புற்றுநோய், கல்லீரல் பாதிப்பு ஏற்படுத்தும் ரசாயனங்கள்... ஏரிகளில் கலப்பு! விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை தர தீர்ப்பாயம் உத்தரவு
சென்னை, சென்னையில் உள்ள ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் புற்றுநோய், கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும் ரசாயனங்கள் கலந்துள்ளது குறித்து விரிவான ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, மத்திய சுற்றுச்சூழல் துறை, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கின்றன. தவிர, சென்னைக்குள் பள்ளிக்கரணை பெரிய ஏரி, திருநீர்மலை ஏரி உள்ளிட்ட ஏராளமான ஏரிகள் உள்ளன.கழிவுநீர் கலப்பு, குப்பை குவிப்பு உள்ளிட்ட சீர்கேடுகளால், மேற்கண்ட ஏரிகளில் தண்ணீர் மாசடைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் சென்னை ஐ.ஐ.டி., அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம், 'நீரி' உள்ளிட்ட அமைப்புகள் ஆய்வு மேற்கொண்டன.இதில், புற்றுநோய், கல்லீரல் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயகரமான ரசாயனங்கள்கலந்திருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. சென்னை நீர்நிலைகளில் கண்டறியப்பட்டுள்ள பெர்ப்ளூரோ அல்கைல் ரசாயனங்கள், புற்றுநோய் மற்றும் கல்லீரல் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை என்றும் தெரியவந்தது. இதன் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்த தீர்பபாயம், 'சென்னை ஏரிகளில் ஆபத்தான ரசாயனங்கள் கலந்திருப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, தமிழக நீர்வளத்துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டது.இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் புற்றுநோய் மற்றும் கல்லீரல் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்தான ரசாயனங்கள் கலந்திருப்பது குறித்து, ஆய்வு நடத்த வேண்டும். மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகமும், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமும் விரிவான அறிக்கை தர வேண்டும். நீர்நிலைகளில் ஆபத்தான ரசாயனங்கள் கலந்திருக்கும் பிரச்னை தொடர்பாக, ஏதேனும் வழிகாட்டுதல்கள் உள்ளதா என்பதையும் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்.இது தொடர்பான ஆய்வுகள் குறித்து, வழக்கின் அடுத்த விசாரணை தேதியான, 2025 ஜன., 3ம் தேதிக்குள் மத்திய சுற்றுச்சூழல் துறை, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.உடல் அரிப்புதொழிற்சாலை, அடுக்குமாடி குடியிருப்புகளின் கழிவுநீர் பல ஆண்டுகளாக தொடர்ந்து கலப்பதால், செம்பரம்பாக்கம் ஏரி நீர் மாசடைந்து, நிறம் மாறி கலங்கலாக உள்ளது. இதனால், இந்த ஏரியில் குளித்தால் உடலில் அரிப்பு ஏற்படுகிறது. ஏரியில் பல இடங்களில் ஆங்காங்கே மீன்கள் செத்து மிதக்கின்றன. ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.- என்.கதிரேசன், 55,மீனவர், செம்பரம்பாக்கம்.எல்லா கழிவும் ஏரியில்தொழிற்சாலை, அடுக்குமாடி குடியிருப்புகள், கழிவுநீரை சுத்திகரித்து, அந்த நீரை தோட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என விதி உள்ளது. ஆனால், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் கழிவுநீரை கால்வாயில் நேரடியாக வெளியேற்றுகின்றன. மேலும், டேங்கர் லாரி மூலம் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து கால்வாயில் கழிவு நீர், கொட்டப்படுகிறது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரி நீர் விஷமாகி வருகிறது. - எஸ்.ராஜேந்திரன்,சமூக ஆர்வலர், இருங்காட்டுக்கோட்டை.
தொழிற்சாலை, வீட்டு கழிவுநீரால்
விஷமாக மாறுகிறதா குடிநீர்?சென்னையின் முக்கிய நீராதாரமான செம்பரம்பாக்கம் ஏரிக்கு கிருஷ்ணா, பங்காரு, சவுத்திரி ஆகிய கால்வாய்கள் நீர்வரத்தாக உள்ளன.இந்த மூன்று கால்வாய்கள் வாயிலாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஏரிகளின் உபரிநீரும், நிலப்பரப்பில் பெய்யும் நீரும், செம்பரம்பாக்கம் ஏரியை வந்தடைகிறது.ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி, காட்டரம்பாக்கம், இருங்காட்டுக்கோட்டை, கீவளூர், தண்டலம், மேவளூர்குப்பம், செம்பரம்பாக்கம் ஆகிய ஊராட்சி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மூன்று கால்வாய் வழியே, செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்கிறது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரி நீர் மாசடைந்து, விஷமாக மாறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:ஏரிகளில் கழிவுநீர் கலப்பதை ஒரு துறையால் மட்டும் தடுத்து நிறுத்த முடியாது. நீர்வளம், மாசு கட்டுபாடு வாரியம், ஊரக வளர்ச்சி, வருவாய், சுகாதாரம், காவல் உள்ளிட்ட துறைகள் அடங்கிய கண்காணிப்பு குழுக்களை ஏற்படுத்த வேண்டும்.இக்குழுவினர், ஏரிகளைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளை கண்காணித்து, கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.