சென்னை ஓபன் கிராண்ட் மாஸ்டர் வீரர் - வீராங்கனையர் பலப்பரீட்சை
சென்னை,அகில இந்திய சதுரங்க கழகத்தின் ஆதரவுடன், தமிழ்நாடு சதுரங்க கழகம் மற்றும் சக்தி குழுமம் இணைந்து, மகாலிங்கம் கோப்பைக்கான 15வது சென்னை ஓபன் இன்டர்நேஷனல் கிராண்ட் மாஸ்டர் சதுரங்கப் போட்டி-2024, எழும்பூரில் நேற்று துவங்கியது.போட்டியில், 'ஏ' பிரிவில் 2,000 ரேட்டிங் மேல், 'பி' பிரிவில் அதற்கு குறைவானோர்; 'சி' பிரிவில், 1,800 ரேட்டிங் குறைவானோர் பங்கேற்றுள்ளனர். இதில், 22 நாடுகளைச் சேர்ந்த 17 கிராண்ட் மாஸ்டர்கள் மற்றும் 27 வெளிநாட்டு வீரர்கள் உட்பட, 300க்கும் மேற்பட்டோர் விளையாடுகின்றனர்.மொத்தம், 10 சுற்றுகளாக 'சுவிஸ்' அடிப்படையில் போட்டிகள் நடக்கின்றன. இரண்டு நாட்கள் மட்டும், இரண்டு சுற்றுகள் வீதமும், மற்ற நாட்களில் தினம் ஒரு சுற்றும் நடக்கின்றன.தரவரிசையில் 2,000க்குள் இடம் பெற்றுள்ள வீரர்கள், எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் மோதுகின்றனர். 'பி' மற்றும் 'சி' பிரிவினருக்கு, நேரு விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடக்கின்றன.இந்த தொடரில் மொத்த பரிசுத் தொகையாக, 40 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. 'ஏ' பிரிவில், 20 லட்சமும், பி மற்றும் சி பிரிவில், தலா 10 லட்சமும் வழங்கப்படுகிறது. போட்டிகள் தொடர்ந்து, 9ம் தேதி வரை நடக்கின்றன.