குழந்தை திருமணம்; சிறுமி மீட்பு பெற்றோர், வாலிபர் மீது வழக்கு
புளியந்தோப்பு,தோழியர் அளித்த புகாரை அடுத்து, குழந்தை திருமணம் நடந்த 14 வயது சிறுமியை, குழந்தைகள் நல அலுவலர்கள் மீட்டனர். திருமணம் செய்த வாலிபர், இருவரின் பெற்றோர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். புளியந்தோப்பு காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்குமார், 26, மற்றும் அவரது பெற்றோர் பெண் கேட்டு நச்சரித்து வந்தனர். அதனால், கடந்த மாதம் 24ம் தேதி, இரு வீட்டாரின் சம்மதத்தோடு, பெசன்ட் நகர் சர்ச்சில் திருமணம் நடந்தது. அன்றே சிறுமியை விக்னேஷ்குமார் தன் வீட்டுக்கு அழைத்து சென்றார். மறுநாள் தன் பெற்றோர் வீட்டுக்கு வந்த சிறுமியை பார்க்க வந்த தோழியர், '181' என்ற குழந்தைகள் நல எண்ணில் தொடர்பு கொண்டனர். விருப்பமின்றி சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தது குறித்து புகார் அளித்தனர். இதையடுத்து, கடந்த மாதம் 25ம் தேதி, குழந்தைகள் நல அலுவலர்கள், சிறுமியை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்தனர்; பின், 29ம் தேதி பெற்றோருடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். குழந்தை திருமணம் குறித்து, நகர நல அலுவலர், புளியந்தோப்பு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, விக்னேஷ்குமார் மற்றும் இருதரப்பு பெற்றோர் மீதும், போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.