பொது மாணவி மீது தாக்குதல் கல்லுாரி மாணவர் கைது
கிண்டி, கல்லுாரி மாணவியை தரக்குறைவாக பேசி தாக்கிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர். பல்லாவரத்தைச் சேர்ந்த 19 வயது கல்லுாரி மாணவி, வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். பல்லாவரத்தைச் சேர்ந்த குகனேஸ்வர், 19. குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில் படித்தார். இருவரும் நண்பர்களாக பழகிய நிலையில், கருத்து வேறுபாட்டால் பிரிந்துள்ளனர். இதையடுத்து குகனேஸ்வரிடம் பேசுவதை, மாணவி தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குகனேஸ்வர், நேற்று முன்தினம், வேளச்சேரி கல்லுாரி அருகில் வைத்து மாணவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில், மாணவியை தரக்குறைவாக பேசியதுடன், கையால் சரமாரியாக தாக்கினார். மாணவி அளித்த புகாரின்படி, நேற்று, கிண்டி போலீசார் குகனேஸ்வரை கைது செய்தனர்.