உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கல்லுாரி மாணவர் கொலை? தண்டவாளத்தில் உடல் மீட்பு

கல்லுாரி மாணவர் கொலை? தண்டவாளத்தில் உடல் மீட்பு

திருநின்றவூர்,ரயில்வே தண்டவாளத்தில் கல்லுாரி மாணவரின் உடல் இரு துண்டுகளாக மீட்கப்பட்ட நிலையில், அவர் கொலை செய்யப்பட்டு உடல் வீசப்பட்டுள்ளதாக உறவினர்களின் குற்றம் சாட்டியுள்ளனர். திருநின்றவூர், கொமக்கம்பேடு, மேட்டு தெருவைச் சேர்ந்தவர் சேகர், 50; எலக்ட்ரீஷியன். இவரது மனைவி ரேணுகா, 45. தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகன் விஜயகுமார், 19, பி.காம்., முதலாம் ஆண்டு மாணவர். கடந்த 25ம் தேதி வீட்டில் இருந்து சென்ற விஜயகுமார், அதன் பின் வீடு திரும்பவில்லை. இது குறித்து வெங்கல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருநின்றவூர் ரயில் நிலையம் அருகே, தண்டவாளத்தில் உடல் துண்டான நிலையில், வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக, 26ம் தேதி ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில், அது, காணாமல் போன விஜயகுமாரின் உடல் என, நேற்று அடையாளம் காணப்பட்டது. போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விஜயகுமார், ரயிலில் அடிபட்டு இறந்ததாக ரயில்வே போலீசார் தெரிவித்த நிலையில், அவரை கொலை செய்து தண்டவாளத்தில் வீசியதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டி மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த புகாரின்படி, திருவள்ளூர் ரயில்வே போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !