வீடு தாமதமாக ஒப்படைத்த நிறுவனம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
சென்னை:பழைய மாமல்லபுரம் சாலை நாவலுார் பகுதியில், டி.ஆர்.ஏ., ஆதித்யா சவுத் சிட்டி என்ற நிறுவனம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுகிறது. இத்திட்டத்தில் வீடு வாங்க, 2021ல் விக்ரம் லட்சுமணன் என்பவர் ஒப்பந்தம் செய்தார். இதன்படி, அவர் பல்வேறு தவணைகளில், 32.38 லட்சம் ரூபாயை செலுத்தினார். இதற்கான ஒப்பந்தத்தில், 2023 செப்., மாதம் வீடு ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், கட்டுமான நிறுவனம் குறிப்பிட்ட நாளில் வீட்டை ஒப்படைக்கவில்லை என்பதால், அதற்கான இழப்பீட்டை விக்ரம் லட்சுமணன் கோரினார். இது தொடர்பாக, அவர் ரியல் எஸ்டேட் ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக, ரியல் எஸ்டேட் ஆணைய விசாரணை அலுவலர் என்.உமாமகேஸ்வரி பிறப்பித்த உத்தரவு: மனுதாரருடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் தெரிவித்தபடி, குறிப்பிட்ட காலத்தில் கட்டுமான நிறுவனம் வீட்டை ஒப்படைக்கவில்லை என்பது உறுதியாகிறது. வீடு தாமதமாகும் நிலையில், அதற்கு நிவாரணமாக, கட்டுமான நிறுவனம் உறுதி அளித்த இழப்பீடு மனுதாரருக்கு கிடைக்கவில்லை. எனவே, கட்டுமான நிறுவனம், மனுதாரருக்கு, 5 லட்சம் ரூபாய் இழப்பீடாகவும், ஒரு லட்சம் ரூபாய் வழக்கு செலவாகவும் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.