குன்றத்துார் கொலையில் கட்டட தொழிலாளி கைது
குன்றத்துார், மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், கட்டட தொழிலாளி கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. குன்றத்துார், பொன்னியம்மன் கோவில், 2வது தெருவில், நேற்று முன்தினம், 40 வயது மதிக்கத்தக்க ஆண், ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்தார். குன்றத்துார் போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் விருகம்பாக்கத்தை சேர்ந்த கட்டட தொழிலாளியான மார்டின், 44, என்பது தெரிய வந்தது. மது பழக்கத்திற்கு அடிமையான சரவணன், மனைவியை பிரிந்து, குன்றத்துாரில் தங்கி கட்டட வேலை செய்து வந்தார். அப்போது, கட்டட தொழிலாளி சரவணன், 34, ராஜா, 34 ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மூவரும் நேற்றுமுன்தினம் மது அருந்தியுள்ளனர். சரவணனுக்கு சீறுநீரக கோளாறு இருக்கும் நிலையில், அடிக்கடி மார்ட்டின் மது வாங்கி கொடுப்பதை ராஜா தட்டிக்கேட்டார். அப்போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. சரவணன் சென்ற நிலையில், மார்டினும், ராஜாவும் நடந்து சென்றனர். அப்போது, ராஜா தன் கையில் வைத்திருந்த மண் வெட்டியால், மார்டினை பின் தலையில் அடித்து கொலை செய்து தப்பியது தெரிய வந்தது. ராஜாவை போலீசார் நேற்று கைது செய்தனர்.