மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத கடைகள் மெரினாவில் வழங்க மறுக்கும் மாநகராட்சி
-சென்னை,நீதிமன்ற உத்தரவுப்படி மெரினாவில், மாற்றுத்திறனாளிகளுக்கு, 5 சதவீத கடைகளை ஒதுக்கும்படி, முதல்வர் உத்தரவிட வேண்டும் என, மாற்றுத்திறனாளி சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.இதுகுறித்து, கூட்டமைப்பின் தலைவர் சிம்மச்சந்திரன் கூறியதாவது:மெரினா கடற்கரையை சீரமைப்பது தொடர்பான வழக்கில், 900 கடைகள் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில், ஏற்கனவே கடை வைத்துள்ளவர்களுக்கு, 540 கடைகளும், புதியவர்களுக்கு, 360 கடைகளும் ஒதுக்கப்பட்டன.இதில், 'ரிசர்வ்' அடிப்படையில், 90 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், மாற்று திறனாளிகள் ஒருவக்குகூட கடை ஒதுக்காமல் புறக்கணிக்கப்பட்டனர். மெரினா கடைகளில், மாற்று திறனாளிகளுக்கும் 5 சதவீத கடைகள் ஒதுக்கக்கோரி, எங்கள் கூட்டமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், 5 சதவீத கடைகள் ஒதுக்குவதாக, சென்னை மாநகராட்சி ஒப்புக்கொண்டது.கடந்த பிப்., 17ல், மாற்று திறனாளிகளுக்கு உரிய கடைகள் ஒதுக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, 45 கடைகளை மாற்று திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும். இது தொடர்பாக, மாநகராட்சி கமிஷனர், மேயர், மாற்று திறனாளிகள் நலத்துறை கமிஷனர் ஆகியோரிடம், நீதிமன்ற உத்தரவு நகலை வழங்கி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.ஆனால், நான்கு மாதங்கள் ஆகியும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது, நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயல்.எனவே, மாற்று திறனாளிகள் நலத்துறையை தன்னிடம் வைத்துள்ள முதல்வர், தனி கவனம் செலுத்தி, உரிய கடைகள் ஒதுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தக்கோரி, ஆர்ப்பாட்டம் நடத்தவும் ஆலோசித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.