உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரசு மருத்துவரின் கார் மோதி  ஸ்கூட்டியில் சென்ற தம்பதி பலி

அரசு மருத்துவரின் கார் மோதி  ஸ்கூட்டியில் சென்ற தம்பதி பலி

ஆவடி, ஆவடியில் அரசு மருத்துவர் ஓட்டி சென்ற கார் மோதியதில், ஸ்கூட்டியில் சென்ற தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருவேற்காடு, ஈஸ்வரன் நகர், ஏழாவது தெருவைச் சேர்ந்தவர் அறிவரசன், 41; தனியார் நிறுவன ஊழியர். அவரது மனைவி சரண்யா, 36; தனியார் நிறுவன மேலாளர். தம்பதிக்கு 5 வயதில் இரட்டை குழந்தைகள் உள்ளனர். அறிவரசன் நேற்று காலை மனைவியுடன், டி.வி.எஸ்., ஸ்கூட்டியில் ஆவடி - பூந்தமல்லி சாலையில் சென்று கொண்டிருந்தார். ஆவடி, வசந்தம் நகர் அருகே சென்றபோது, பின்னால் வேகமாக வந்த 'மாருதி சுசூகி பலேனோ' கார், ஸ்கூட்டியில் மோதி சிறிது துாரம் இழுத்து சென்றுள்ளது. இதில், அறிவரசன், சரண்யா தம்பதி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் நின்றிருந்த சரக்கு வாகனத்தில் மோதி, தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், தம்பதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக, போரூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், காரை ஓட்டி வந்தது ஆவடி, பல்லவன் நகரைச் சேர்ந்த அரசு மருத்துவர் பாரி மார்க்ஸ், 46, என தெரிந்தது. பூந்தமல்லி அடுத்த சோராஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் இவர், ஆவடி நோக்கி கார் ஓட்டி சென்றபோது, திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், கட்டுப்பாட்டை இழந்த கார், விபத்தில் சிக்கியது தெரிய வந்தது. பலத்த காயமடைந்த பாரி மார்க்ஸ், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ