முதியவர் சடலம் மீட்பு மேடவாக்கம்: மேடவாக்கம்- - பரங்கிமலை பிரதான சாலை, வெள்ளைக்கல் பேருந்து நிறுத்தம் எதிரில், ஒரு கடையின் வாசலில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். மேடவாக்கம் போலீசார் நேற்று, சடலத்தை கைப்பற்றி, தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கடந்த இரு நாட்களாக, கடை வாசலில் இரவில் தங்கி வந்ததாக, கடை உரிமையாளர் தெரிவித்தார். மேற்கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். காயலான் கடை கிடங்கில் தீ கொடுங்கையூர்: கொடுங்கையூர், கடும்பாடி அம்மன் கோவில் தெருவில், பழைய 'பிரிஜ், வாஷிங் மிஷின்' உள்ளிட்ட பொருட்களை வைக்கும் கிடங்கு உள்ளது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, கிடங்கில் தீப்பற்றி எரிந்தது. கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி தீயணைப்பு நிலைய வீரர்கள், ஒன்றரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். கிடங்கில் இருந்த இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக, கிடங்கு உரிமையாளர் குமரேசன், 45, தெரிவித்தார். கொடுங்கையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். உணவு சாப்பிட்டவர் மூச்சுத்திணறி பலி ஓட்டேரி: ஓட்டேரி, புதிய வாழை மாநகரைச் சேர்ந்தவர் முனு சாமி, 49; கார் ஓட்டுநர். இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தவர். நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு, வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்தபோது, திடீரென மூச்சுத்திணறி மயங்கி விழுந்து இறந்தார். ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர். 7 வயது சிறுமியிடம் அத்துமீறியவர் கைது பம்மல்: பம்மலில் வசித்து வரும் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, சில நாட்களுக்கு முன் வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த கட்டட தொழிலாளியான நரேஷ் ராம், 51, என்பவர், சிறுமியை வீட்டிற்குள் அழைத்து சென்று, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து தப்பி வீட்டிற்கு சென்ற சிறுமி, பெற்றோரிடம் கூறியுள்ளார். விசாரித்த பல்லாவரம் மகளிர் போலீசார், நேற்று முன்தினம், நரேஷ் ராமை கைது செய்தனர். 10 கிலோ கஞ்சா பறிமுதல் பெரம்பூர்: பெரம்பூர், லோகோ ரயில் நிலையம் அருகே, நேற்று காலை ரோந்துப்பணியில் இருந்த செம்பியம் போலீசார், ஒடிஷாவைச் சேர்ந்த ஷான்ஜி நாயக், 36, என்பவரை பிடித்தனர். அவரது பையில் 10 கிலோ கஞ்சா இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், ஷான்ஜி நாயக்கை கைது செய்தனர். l ஆந்திராவில் இருந்து, கஞ்சா கடத்தி வந்த தண்டையார்பேட்டையைச் சேர்ந்த விஜய், 27, என்பவரை கைது செய்த திருவொற்றியூர் போலீசார், 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். l கொரட்டூர் பேருந்து நிலையத்தில், 1 லட்சம் ரூபாய் மதிப்புடைய 8 கிலோ கஞ்சாவை வைத்திருந்த துாத்துக்குடியைச் சேர்ந்த ரோகித், 25, என்பவரை, அம்பத்துார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சித்தப்பாவை வெட்டிய அண்ணன் மகன் கைது சென்னை: தி.நகர், ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் நவீன்குமார், 34. இவரது அண்ணன் சாம்குமார், வீட்டின் மேல் தளத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கீழ்தள வீட்டை பயன்படுத்துவது தொடர்பாக, இருவருக்கும் தகராறு இருந்துள்ளது. கடந்த 1ம் தேதி இரவு நவீன்குமார், அவரது மனைவி ரேவதி மற்றும் மகளுடன், வடக்கு உஸ்மான் சாலை, திலக் தெருவில் டிபன் வாங்கி வீட்டுக்கு சென்றார். அப்போது சாம்குமாரின் மகன் ஷாம், 19, தன் நண்பர்களுடன் சேர்ந்து, 'எதற்காக என் அப்பாவிடம் தகராறு செய்கிறாய்' எனக் கேட்டு, நவீன்குமார் மற்றும் ரேவதியை கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். காயமடைந்த இருவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விசாரித்த பாண்டிபஜார் போலீசார், ஷாம், அவரது நண்பர்கள் ரூபன், 19, தினேஷ், 21, கோகுல்கண்ணன், 21 ஆகிய நான்கு பேரை நேற்று கைது செய்தனர்.