உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆலந்துாரில் சேதமான சாலைகள் ரூ.15.24 கோடியில் புனரமைப்பு

ஆலந்துாரில் சேதமான சாலைகள் ரூ.15.24 கோடியில் புனரமைப்பு

ஆலந்துார்:ஆலந்துார் மண்டலத்தில், 157 முதல் 167 வரை, 12 வார்டுகள் அமைந்துள்ளன. இம்மண்டலம், சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்டது.அதனால், ஆலந்துார், நங்கநல்லுார், ஆதம்பாக்கம் தவிர, மற்ற பகுதிகளில் பாதாள சாக்கடை, குடிநீர், தரமான சாலை, மழைநீர் வடிகால் வசதிகள் பெரிய அளவில் இல்லை.கடந்த பத்து ஆண்டுகளாக, மண்டலம் முழுதும் பாதாள சாக்கடை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.ஆலந்துார், நங்கநல்லுார், ஆதம்பாக்கத்தில் பாதாள சாக்கடை பிரதான குழாய் புனரமைப்பு பணி நடந்து வருகிறது. இதனால், பல இடங்களில் சாலைகள் குதறப்பட்டுள்ளன.இந்நிலையில், 15.24 கோடி ரூபாயில், 160 தார் மற்றும் சிமென்ட் சாலைகளை சீரமைக்கும் பணி, நங்கநல்லுார், ராம்நகரில் நேற்று துவக்கப்பட்டது.இதில், மண்டல குழு தலைவர் சந்திரன், மண்டல உதவி கமிஷனர் முருகதாஸ் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.சாலை திட்டம் குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னை மாநகராட்சியின் ஆலந்துார் மண்டலத்தில், பல்வேறு திட்டப் பணிகளுக்காக சேதப்படுத்தப்பட்ட, 160 தார், சிமென்ட் சாலைகள், 15.24 கோடி ரூபாயில் புனரமைக்கப்படுகின்றன.இதில், நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 12 சாலைகள், நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 55 சாலைகள், மாநகராட்சி சிறப்பு நிதியின் கீழ், 93 சாலைகள் அடங்கும்.புதிதாக அமைக்கப்படவுள்ள சாலை, 19.35 கி.மீ., துாரம் கொண்டது. இப்பணிகள், வரும் பருவ மழைக்கு முன்பாகவே முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !