கொடிமரம் வரும் 3ல் சீரமைப்பு அகத்தீஸ்வரர் கோவில் விளக்கம்
வில்லிவாக்கம், வில்லிவாக்கம், அகத்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் சேதமடைந்துள்ள கொடி மரத்தையும் சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து நம் நாளிதழில் 'கொடி மரம் சேதம்; 6 மாதமாக கண்டுகொள்ளாத அவலம்' என, நேற்று செய்தி வெளி வந்திருந்தது.இது தொடர்பாக, அகத்தீஸ்வரர் கோவில் நிர்வாகம் வெளியிட்ட விளக்கம்:'பெஞ்சல்' புயல், தொடர் மழை காரணமாக கடந்தாண்டு நவ., 30ம் தேதி, கொடிமரத்தில் உள்ள செப்பு தகடுகள் சேதமடைந்தன. இது டிச., 2ல் கண்டறியப்பட்டு, அன்றைய தினமே தலைமையிட ஆலோசகர், திருத்தேர் ஸ்தபதி, தொல்லியர் ஆலோசகர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். கொடி மரத்தின் கருங்கல் பீடத்திற்கு மேல் சுவாமி திருவுருவம் பொருத்தப்பட்ட இடம் மிகவும் பழுதடைந்துள்ளது எனவும், உள்மரம் நல்ல நிலையில் இருப்பதும் குறித்து கருத்துரு வழங்கினர்.இது தொடர்பாக சென்னை மண்டல துணை கமிஷனருக்கு கடிதம் சமர்ப்பிக்கப்பட்டு, வரும் பிப்., 3ல், ஆகம விதிகளின்படி கொடிமரத்தை சீரமைக்கும் பணி துவங்க உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.