பி மண்டல வாலிபால் போட்டி டி.ஜி.வைஷ்ணவா முதலிடம்
சென்னை:சென்னை பல்கலையின், 'பி' மண்டல வாலிபால் போட்டியில், டி.ஜி.வைஷ்ணவா கல்லுாரி முதலிடத்தை தட்டிச் சென்றது. சென்னை பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளை இரு மண்டலங்களாக பிரித்து, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. அந்த வகையில், டி.ஜி.வைஷ்ணவா கல்லுாரி சார்பில், 'பி' மண்டல வாலிபால் போட்டி, எழும்பூர், அரும்பாக்கத்தில் கடந்த 19ல் துவங்கி, நேற்று முன்தினம் மாலை நிறைவடைந்தது. போட்டியில், 'பி' மண்டலத்திற்கு உட்பட்ட 36 கல்லுாரி அணிகள், 'நாக் அவுட்' முறையில் எதிர்கொண்டன. முதல் அரையிறுதியில், டி.ஜி.வைஷ்ணவா அணி, 2 - 0 என்ற செட் கணக்கில் ஜெ.எச்.அக்ரசன் கல்லுாரியையும், மற்றொரு அரையிறுதியில், நாசரேத் கல்லுாரி, 2 - 0 என்ற செட் கணக்கில் ஏ.எம்.ஜெயின் கல்லுாரியையும் வீழ்த்தின. விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், டி.ஜி.வைஷ்ணவா கல்லுாரி, 2 - 0 என்ற செட் கணக்கில், நாசரேத் கல்லுாரியை வீழ்த்தி, முதலிடத்தை தட்டிச் சென்றது.