மாநில வில்வித்தை போட்டி தயன்சந்த் அகாடமி அபாரம்
சென்னை, மார்ச் 7-மாநில அளவிலான வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில், சென்னை தயன்சந்த் அகாடமி வீரர், வீராங்கனையர், பல்வேறு பிரிவுகளில், 15 தங்கம் உட்பட 40 பதக்கங்களை வென்றனர். தமிழ்நாடு வில்வித்தை சங்கம் சார்பில், 18வது மாநில அளவிலான வில்வித்தை போட்டி, தாம்பரம் அருகில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லுாரியில் நடந்தது. போட்டியில், மாநில முழுதும் இருந்து, 1,000 வீரர், வீராங்கனையர் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.இதில், இந்தியன் 'போ', இந்தியன் 'ரிகர்வ்' மற்றும் காம்பவுண்டு ஆகிய மூன்று பிரிவுகளில், பல்வேறு வயது வாரியாக போட்டிகள் நடத்தப்பட்டன.போட்டியில், சென்னையை சேர்ந்த தயன்சந்த் அகாடமி வீரர், வீராங்கனையர், 13 தங்கம், 15 வெள்ளி, 12 வெண்கலம் என, மொத்தம் 40 பதக்கங்களை வென்று அசத்தினர். போட்டியில் பல்வேறு பிரிவுகளில் பதக்கம் வென்ற, 40க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனையர், இம்மாதம் ஆந்திராவில் நடக்க உள்ள தேசிய போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.***