உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்சூரன்ஸ் எடுத்தவர் பொய் தகவல் அளித்தாரா? மறுக்கப்பட்ட ரூ.ஒரு கோடியை வழங்க உத்தரவு

இன்சூரன்ஸ் எடுத்தவர் பொய் தகவல் அளித்தாரா? மறுக்கப்பட்ட ரூ.ஒரு கோடியை வழங்க உத்தரவு

சென்னை, உடல் நல பாதிப்பு ஏதுமில்லை என்று, பொய் தகவல் அளித்திருந்ததாக கூறி, இறந்தவரின் குடும்பத்திற்கு காப்பீட்டு தொகை வழங்க மறுத்த இன்சூரன்ஸ் நிறுவனம், ஒரு கோடி ரூபாய் வழங்க, நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்தவர் சுவேதா போத்திராஜ். இவர், சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தாக்கல் செய்த மனு: என் கணவர் சிரெயாஸ். சென்னையில் உள்ள, 'சாப்ட்வேர்' நிறுவனத்தில், மேலாளராக பணியாற்றி வந்தார். கடந்த, 2020ல் ஐ.சி.ஐ.சி.ஐ., இன்சூரன்ஸ் நிறுவனம் வாயிலாக, ஒரு கோடி ரூபாய் காப்பீடு செய்திருந்தார். கல்லீரல் பாதிப்பு காரணமாக, 2022ல் உயிரிழந்தார். காப்பீட்டு தொகை, ஒரு கோடி ரூபாய் கோரி, இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு மனு அளித்தேன். ஆனால், காப்பீடு செய்யும் முன், தனக்கு எந்தவித உடல்நல பாதிப்பும் இல்லை என, உண்மையை மறைத்து, உத்தரவாதம் அளித்ததாகக்கூறி, காப்பீடு தொகை கோரிய, என் விண்ணப்பத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் நிராகரித்தது. கடந்த, 2019ல் கணவருக்கு எடுக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், கல்லீரல் பாதிப்பு குறித்து தெரிவிக்கப்படவில்லை. எனவே, காப்பீட்டு தொகையை வழங்க, இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை, ஆணைய தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. அப்போது, 'காப்பீடுதாரர் பொய்யான உத்தரவாதத்தை அளித்திருக்கும் பட்சத்தில், அவர் செலுத்திய பிரீமியம் தொகை மட்டுமே, அவருக்கு திரும்ப வழங்கப்படும். 'அந்த வகையில், மனுதாரரின் கணவர் செலுத்திய பிரிமீயம் தொகை, 1.71 லட்சம் ரூபாய் திரும்ப வழங்கப்பட்டு விட்டது' என, இன்சூரன்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின் ஆணையம் பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் கணவர் அளித்ததாக கூறப்படும் அசல் உத்தரவாத படிவம், இன்சூரன்ஸ் நிறுவனத்தால், ஆணையத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. இதனால், இன்சூரன்ஸ் நிறுவனம் கூறுவது போன்று, மனுதாரரின் கணவர் பொய்யான உத்தரவாதம் அளித்தார் என்ற முடிவுக்கு வர இயலவில்லை. இன்சூரன்ஸ் நிறுவனம், மனுதாரரின் விண்ணப்பத்தை நிராகரித்தது நியாயமற்றது. எனவே, மனுதாரருக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் ஏற்கனவே வழங்கிய பிரீமியம் தொகை போக, மீதமுள்ள காப்பீட்டு தொகை, 98.28 லட்சம் ரூபாயை வழங்க வேண்டும். இழப்பீடாக 25,000 ரூபாய், வழக்கு செலவு தொகையாக, 5,000 ரூபாய் வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ