உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னை ஏர்போர்ட்டில் டிஜியாத்ரா சேவை பயன்பாட்டில் இருந்தும் பயணியருக்கு சிக்கல்

சென்னை ஏர்போர்ட்டில் டிஜியாத்ரா சேவை பயன்பாட்டில் இருந்தும் பயணியருக்கு சிக்கல்

சென்னை சென்னை விமான நிலையத்தில் செயல்பாட்டில் உள்ள, 'டிஜி யாத்ரா' சேவையை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படுவதாக, பயணியர் புகார் தெரிவித்துள்ளனர்.பயணியர் விமான நிலைய புறப்பாடு நுழைவு வாயிலில், அரசு வழங்கியுள்ள அடையாள ஆவணங்களை, மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் காண்பித்து செல்ல வேண்டும். நீண்ட வரிசையில் நிற்பதால், போர்டிங் பாஸ் பெற நேரம் ஆகிறது.எனவே, பயணியர் எளிமையாக உள்ளே செல்வதற்கு, மத்திய அரசு, 'டிஜியாத்ரா' எனும் முக அடையாளத்தை காண்பித்து செல்லும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது. இந்த திட்டம் சென்னை, பெங்களூரு, கோல்கட்டா, டில்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களில், தற்போது செயல்பாட்டில் உள்ளது.'டிஜி யாத்ரா' செயலியில், நம் அரசு அடையாள அட்டை மற்றும் போர்டிங் பாஸ்களை பதிவேற்றம் செய்து, விமான நிலைய சி.ஐ.எஸ்.எப்., அதிகாரிகளை, நேரில் சந்திக்காமலேயே உள்ளே செல்லலாம். இதனால் பயணியருக்கு நேரம் மிச்சமாகும். ஒரு முறை பதிவு செய்தால் போதும். இத்திட்டம் சென்னை விமான நிலையத்தில், கடந்தாண்டு ஜூனில் செயல்பாட்டுக்கு வந்தது. பயணியர் 'டிஜி யாத்ரா' செயலியை கணிசமாக பயன்படுத்த துவங்கிய நிலையில், இந்த சேவையை பயன்படுத்த முடியாமல் போவதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, பயணியர் கூறியதாவது:சென்னையில், 'டிஜி யாத்ரா' திட்டம் செயல்பாட்டிற்கு வந்தது முதல் பயன்படுத்தி வருகிறோம். சில நாட்களாக செயலியை பயன்படுத்தி உள்நுழைவதில் சிக்கல் ஏற்படுகிறது. செயலியில் போர்டிங் பாஸ் விபரங்களை பதிவேற்றம் செய்து, கேட் வாயிலில், 'ஸ்கேன்' செய்ய முடிவதில்லை. அங்குள்ள, 'டிஸ்ப்லேவில்' பாதுகாப்பு அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. சில நேரம் முக அடையாளங்களை ஏற்றுக் கொள்ளவும் மறுக்கிறது. இதனால், வேறு வழியின்றி போர்டிங் பாஸ்களை, பாதுகாப்பு அதிகாரிகளிடம் காண்பித்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. மும்பை உள்ளிட்ட மற்ற எந்த விமான நிலையங்களிலும் இந்த பிரச்னை இல்லை. சென்னை விமான நிலையத்தில் மட்டும், இதுபோன்ற பிரச்னை ஏற்படுகிறது. விமான நிலைய அதிகாரிகள் இதற்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில்,'செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்ட விபரங்கள் மாறி இருந்தால், பயன்படுத்தும்போது சிரமம் ஏற்படலாம். செயலியில் விபரங்களை மீண்டும் ஒரு முறை உள்ளிட்டால் பிரச்னை ஏற்படாது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை