மணலி: தி.மு.க., சார்பில் நடந்த, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 'ஹாட் பாக்ஸ்'சுக்காக நடந்த தள்ளுமுள்ளுவால் சலசலப்பு ஏற்பட்டது. திருவொற்றியூர் மத்திய பகுதி பொறியாளர் அணி சார்பில், துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளையொட்டி, பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் இரவு, மணலி, அண்ணாசிலை அருகே நடந்தது. இதில், தி.மு.க., மாவட்ட செயலர் சுதர்சனம், பகுதி செயலர்கள், ஆறுமுகம், அருள்தாசன் மற்றும் சிறப்பு அழைப்பாளராக துணை பொதுச் செயலர் திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டம் முடிந்ததும், ஓரிருவருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிரமுகர்கள், அங்கிருந்து கிளம்பினர். அங்கு காத்திருந்த மக்களுக்கு, பொறியாளர் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள், ஹாட் பாக்ஸ் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினர். அப்போது, பொதுமக்கள் மேடையை நோக்கி மொத்தமாக முண்டியடித்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. பாதுகாப்பு பணியில் இருந்த மணலி போலீசார் சுதாரித்து, கூட்டத்தை ஒழுங்குப்படுத்தினர்.