விபத்தில் துண்டான வாலிபர் இடது கையை வலது கையாக பொருத்தி டாக்டர்கள் சாதனை
சென்னை ரயில் விபத்தில் சிக்கி துண்டான வட மாநில வாலிபரின் இடது கையை, சேதமடைந்த வலது கைக்கு மாற்றிப் பொருத்தி, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். இதுகுறித்து, மருத்துவமனையின் முதல்வர் சாந்தராம் கூறியதாவது: பீஹாரைச் சேர்ந்த 28 வயது தொழிலாளி, செப்., 26ல், சென்னையில் நேர்ந்த ரயில் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். இதில், அவரது இடது கை தோள்பட்டை வரை துண்டானது; வலது கையும் மணிக்கட்டுக்கு மேல் சிதைந்துவிட்டது. இரு கைகளும் செயல்பாட்டில்லாத நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை பேராசிரியர் பி.ராஜேஸ்வரி, உதவி பேராசிரியர்கள் ரஷிதா பேகம், வளர்மதி, சுவேதா, முதுநிலை டாக்டர்கள் ஷோனு, அன்னபூரணி, விக்ரம், சந்தோஷினி, மயக்கவியல் நிபுணர் சண்முகப்பிரியா ஆகியோர் அடங்கிய குழுவினர், அந்நபருக்கு கைகளை மாற்றி பொருத்தும் சிகிச்சை செய்ய முன்வந்தனர். அதன்படி, துண்டான இடது கையின் பகுதியை, வலது முழங்கையில் இணைத்தனர். அறுவைச் சிகிச்சை 10 மணி நேரம் நீடித்தது. எலும்பு கட்டமைப்பு மாற்றி அமைக்கப்பட்டது. தசை, நரம்பு மற்றும் ரத்தக் குழாய்களும் சீரமைக்கப்பட்டன. மிக நுட்பமாக மேற்கொள்ளப்பட்ட இச்சிகிச்சை வாயிலாக, ரத்த ஓட்டம் பாய்ந்து, வலது கை செயல்பட துவங்கியது. அந்நோயாளி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். கையை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர பிசியோதெரபி சிகிச்சையும், தொடர் கண்காணிப்பும் அவருக்கு தேவை. இதுபோன்று கைகளை மாற்றி பொருத்தும் சிகிச்சை, இந்தியாவிலேயே இதற்கு முன்பு ஒரு முறைதான் செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் மூன்று சிகிச்சைகள் தான் நடந்துள்ளன. மிகவும் சவால் நிறைந்த சிகிச்சையை, அரசு டாக்டர்கள் சாத்தியமாக்கி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.